தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி, நாட்டில் சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது என்றும் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும் என்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் சந்திர சேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவலால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.