’நம்பாதவர்களுடன் எப்படி படிப்பது?’: தோழிகளால் புறக்கணிப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!
வகுப்பு தோழிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் மாணவி, அவமானத்தால் பள்ளி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு 11 ஆம் வகுப்பு படித்து வந்தார், 16 வயது மாணவி ஒருவர். இவர் ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் நேற்று காலை தற்கொலை செய்திருந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாணவி, தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், ‘அந்த சம்பவம் நடந்து மூன்று வருடத்துக்கு பிறகும் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறேன். நான் மன்னிக்கப்படவில்லை. தொடர்ந்து அவமானப்படுத் தப்பட்டேன். என்னை விரும்பியவர்கள் கூட என்னிடம் இருந்து விலகிவிட்டனர். என்னை என் வகுப்பு தோழிகள் நம்பா விட்டால், பிறகு எப்படி 12 ஆம் வகுப்பு வரை அவர்களுடன் இங்கு படிக்க முடியும்? அதனால் தற்கொலை செய்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வகுப்பு தோழி ஒருவர் கூறும்போது, ’மூன்று வருடத்துக்கு முன், வேறொரு மாணவியின் தின்பண்டத்தை திருடிவிட்டார் இவர். இதனால், மூத்த மாணவிகள் அவருக்கு தண்டனை கொடுத் தனர். அதாவது 48 மாணவிகள் அவரை அடித்தனர்’ என்றார்.
வகுப்புத் தோழிகளால் புறக்கப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.