ஆடையில் மலம்கழித்த சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய ஆசிரியை! கர்நாடகாவில் கொடூரம்

ஆடையில் மலம்கழித்த சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய ஆசிரியை! கர்நாடகாவில் கொடூரம்
ஆடையில் மலம்கழித்த சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய ஆசிரியை! கர்நாடகாவில் கொடூரம்

ஆடையில் மலம்கழித்த 7 வயது சிறுவன்மீது ஆசிரியரே கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 

மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர் கண்டிப்பதுண்டு. ஆனால் சில ஆசிரியர்கள் அதையே தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு மாணவர்களை அடித்து துன்புறுத்தும் கொடூர செயல்களை குறித்து அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். அந்த வரிசையில் ஆடையிலேயே மலம் கழித்த 2ஆம் வகுப்பு மாணவன்மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளார் கொடூர ஆசிரியர் ஒருவர். இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சந்தேகல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஞானமாதேஸ்வர கிரமீனா சமஸ்தேக்கு சொந்தமான தொடக்கப்பள்ளி.

இந்த பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் தனது ஆடையிலேயே மலம்கழித்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஹூலிகெப்பா மாணவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளார். இதனால் சிறுவனின் உடலில் 40% காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மாணவன் லிங்காசகுரு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது ஒருவாரம் கழித்தே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’இந்த சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் யாரும் இதுவரை புகாரளிக்கவில்லை. அதனால் வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. எங்களுடைய காவலர்கள் பள்ளியில் விசாரணை நடத்தினர். ஆனாலும் இது பள்ளிக்கல்வித்துறைக்கு கீழ் வருகிறது. அங்கிருந்துதான் எங்களுக்கு புகார் வரவேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை’’ என்கின்றனர்.

இதுகுறித்து தகவல் சேகரித்த உள்ளூர் மீடியாக்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தாரை உள்ளூர் தலைவர்கள் மிரட்டுவதாகவும், அதனால் புகாரளிக்க பயப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கர்நாடகாவின் தமக்குரு நகரிலுள்ள ஒரு அங்கன்வாடி மையத்தின் 3 வயது சிறுவன் ஆடையில் மலம்கழித்ததற்காக பிறப்புறுப்பில் ஆசிரியை ஒருவர் சூடுவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த 3 நாட்களில் இந்த சம்பவமும் வெளிவந்துள்ளது. சிறுவனுக்கு சூடுவைத்த உதவி ஆசிரியர் பெயர் ராஷ்மி(28). தாயாரை இழந்த அந்த சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அந்த ஆசிரியர் மீது இந்திய சட்டப்பிரிவு 285இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com