விரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை | அசாம்-மிசோரம் பேச்சுவார்த்தை

விரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை | அசாம்-மிசோரம் பேச்சுவார்த்தை
விரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை | அசாம்-மிசோரம் பேச்சுவார்த்தை

ஆகஸ்ட் 2ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழகம் வருகிறார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் கல்லூரி வகுப்புகள்: ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருக்கிறது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து. லீக் சுற்றில் 2-0 என்ற கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

வில்வித்தை - வெளியேறினார் தருண்தீப்: ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இஸ்ரேல் வீரரிடம் தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டார்.

பேருந்து விபத்து - 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு: உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். ஹரியானாவிலிருந்து சொந்த ஊரான பீகாருக்கு சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறார்களுக்கான தடுப்பூசி ஆகஸ்டில் கிடைக்கும்: 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆகஸ்டில் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் -முதலமைச்சர் ஆலோசனை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்: நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்திவருகிறது.

தவறான ஊசியால் மரணம் - செவிலி சஸ்பெண்ட்: தவறான ஊசி செலுத்தப்பட்டதால் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் செவிலியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கீழடியில் வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கீழடி அகழ்வாராய்ச்சியில் சூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் காணப்படும் வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

அபராதம், விமர்சனத்திற்கு இடைக்காலத் தடை: சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தனி நீதிபதி முன்வைத்த விமர்சனத்துக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நில பத்திரங்கள், லேப்டாப்கள் பறிமுதல்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தனியார் நிறுவனத்தின் ஆலோசகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் காட்டப்படாத நில பத்திரங்கள், 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று பதவியேற்கிறார் பசவராஜ் பொம்மை: கர்நாடகவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் பசவராஜ் பொம்மை. ஆளுநர் மாளிகையில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிப்பு: இந்தியாவின் நடப்பு நிதியாண்டு பொருளாதார வளர்ச்சி கணிப்பை சர்வதேச நிதியம் குறைத்தது. கொரோனா தாக்கத்தால் 9.5 சதவிகிதமாக குறையும் என அறிவித்திருக்கிறது.

எம்பிபிஎஸ்: ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு தீர்வு காண்க: மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு அளிக்காதது குறித்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மத்திய கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பெகாசஸ் - ஒத்திவைப்பு தீர்மானம்?: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட கோரிக்கை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார். பெகாசஸ் விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியதாக மம்தா பேட்டியளித்திருக்கிறார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக: ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் பட்டியல் குறித்த விரிவான அறிக்கையை அனுப்புக என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

அசாம்-மிசோரம் இன்று பேச்சுவார்த்தை: அசாம்-மிசோரம் எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து இரு மாநில முதல்வர்களும் பரஸ்பர குற்றம்சாட்டி வருகின்றனர். இரு மாநிலங்களுக்கிடையே மத்திய உள்துறை செயலர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் தடை: இந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சவுதி அரேபியா அறிவித்திருக்கிறது.

சீமோன் பைல்ஸ் திடீர் விலகல்: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் குழு போட்டியிலிருந்து அமெரிக்க வீராங்கனை சீமோன் பைல்ஸ் திடீரென விலகினார். மனநல பிரச்னையால் இறுதிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com