சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?

சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?

இந்தியாவில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, கைக்கு கிடைக்கும் சம்பளப் பணம், வேலை நேரம் உள்ளிட்டவற்றில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மாற்றம் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூலை 1-ல், புதிய இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலுக்கு வருவதன் விளைவாக இந்த மாற்றங்கள் நிகழும்.

இந்த மாற்றத்தில், வேலை நேரம் நீட்டிப்பு - அதிக வைப்பு நிதி - கைக்கு கிடைக்கும் சம்பளத்தில் குறைவு ஆகிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுமென சொல்லப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து, சில மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கென தனி தொழிலாளர் சட்டங்களை வகுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

பாராளுமன்றம் இச்சட்டத்தை நிறைவேற்றி விட்டாலும்கூட, அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் தொழிலாளர் நலச்சட்டங்கள் ஒரு அங்கமாக இருப்பதால், மாநிலங்கள் புதிய குறியீடுகளின் கீழ் தங்களுக்காக விதிகளை அறிவிக்ககூடுமென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புதிய சட்டத்தில் அடிப்படை ஒரு நாள் வேலை நேரம் 8 - 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படக்கூடும். அப்படி அதிக நேரம் பணி செய்வோருக்கு வார விடுமுறையானது, வாரத்துக்கு மூன்று நாள்கள் வழங்கப்படும்.

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ் மொத்த மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத அடிப்படைச் சம்பளம் இருக்கும் என்பதால், ஊழியர்களுக்கு கைக்கு கிடைக்கும் சம்பளம் கணிசமாக குறையக்கூடும். இதனால் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் கூடுதல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுமென சொல்லப்படுகிறது. அதேநேரம் இதன் விளைவாக ஊழியர்கள் மற்றும் முதலாளிகளின் வைப்பு நிதி பங்கு உயரக்கூடும். பணிக்காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளிலும் மாற்றங்கள் வரவுள்ளன. அதன்படி, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறுவது போன்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன.

இதில் ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது. இருப்பினும்கூட இந்த விதிகள் கட்டாயம் அல்ல என்றும் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com