தாஜ்மஹாலை பராமரிக்க கோட்டைவிட்ட தொல்லியல்துறை: உச்சநீதிமன்றம் காட்டம்
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை முறையாக பராமரிக்க இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
உலக அதிசயங்களுள் ஒன்று தாஜ்மஹால். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாஜ்மஹாலை காண நாள்தோறும் இந்தியா மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். இதனிடையே வழக்கறிஞர் மேக்தா என்பவர் தாஜ்மஹால் நிறம் மாறி வருவதாக புகார் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுதொடர்பான புகைப்படங்களையும் மேக்தா தனது மனுவில் இணைத்திருந்தார். தாஜ்மஹாலை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
<
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பார்வையார்கள் துவைக்காத சாக்ஸ் உடன் உள்ளே வருவதும், பரவலான பாசிகளுமே தாஜ்மஹாலின் நிறமாற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. தாஜ்மஹால் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால் பாதிப்படைவதாகவும் குறிப்பிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தாஜ்மஹாலின் உச்சத்திலும் நிறமாற்றம் காணப்படுகிறது. அங்கு எப்படி பாசி சென்றது என கேள்வி எழுப்பினார்.
மேலும் நிறமாற்றத்திற்கு பாசி மட்டும காரணம் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தனது தவறை ஒத்துக்கொள்ள மறுக்கிறது எனவும் குறிப்பிட்டார். தாஜ்மஹாலை பராமரிக்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார். தனது பணியைச் சரியாகச் செய்திருந்தால் இந்தப் பிரச்சினையே எழுந்திருக்காது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, கடமை தவறிய தொல்லியல் துறையின் பணி, தேவையா... இல்லையா என்பதை, மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.