20 பேரை பலிகொண்ட சூரத் தீ விபத்து: பயிற்சி மைய உரிமையாளர் கைது
சூரத்தில் தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி மையத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் தக்சஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டடத்தில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் நான்காவது மாடியில் மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தில் நடந்த தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் பிழைப்பதற்காக சிலர் 4-வது மற்றும் 3-வது மாடிகளிலிருந்து கீழே குதித்ததில் உயிரிழந்துள்ளனர். அதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி மையத்தின் உரிமையாளர் பார்கவ் புடானி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தத் தீ விபத்து சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஆகிய மூன்று பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.