
பேரியம் வேதிப்பொருளை கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதேபோல், சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பேரியம் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரி, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சரவெடி மற்றும் பேரியம் கொண்டு தயாரிக்கும் பட்டாசுகள் தொடர்பான வழக்கில் மட்டும் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018ஆம் ஆண்டுமுதல் உள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சரவெடி மற்றும் பேரியம் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கவும் மறுத்துள்ளது.