வைகோ வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி மதிமுக பொதுசெயலாளரும் எம்.பியுமான வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கோரி வைகோ எம்.பி, மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.