குஜராத் ராஜ்யசபா தேர்தல் : காங். மனுவை நிராகரித்தது நீதிமன்றம்
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலை தனியாக நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த தேர்தலில் அமித்ஷாவும், ஸ்மிருதி இரானியும் குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் அமித்ஷா காந்திநகர் தொகுதியிலும், ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியாகியுள்ள நிலையில், அவற்றுக்கான இடைத்தேர்தலை தனியாக நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைக் கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், காலியான இடங்களின் தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டனர். அதைப் பொறுத்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைக் கருத்தில் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தனியாக தேர்தல் நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.