அலோக் வர்மா வழக்கு: மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை ஊழல் புகார் காரணமாக, நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் அவர்களை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தன்னை விடுவித்தும், கட்டாய விடுப்பில் அனுப்பியும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக, அலோக் குமார் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலை யில், அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அலோக் வர்மாவை, சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என்று அறிவித்த உச்சநீதி மன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. சிபிஐ இயக்குனராக அவர் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.