‘டிக்டாக்’ மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
‘டிக்டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டிக்டாக்’ செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ‘டிக்டாக்’ நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ‘டிக்டாக்’ நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 15 அன்று அதாவது இன்று விசாரிப்பதாக தெரிவித்தது. அதன்படி இன்று ‘டிக்டாக்’ வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் ‘டிக்டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 22-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.