பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதியை இடிக்கத் தூண்டியதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விசுவ இந்து பரிசத்தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக சுரேந்திர குமார் யாதவ் நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தினார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிப்பதால், நீதிபதிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்கினார். அதில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார்.

இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டபின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது, அவரும் ஓய்வு பெற்றார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார். அதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதால், தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இக்கடிதம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையில் நீதிபதிகள் நவின் சின்ஹா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் வேண்டுகோளின்படி அவருக்கான பாதுகாப்பை நீட்டிக்க முடியாது. அவரின் கடிதத்தைப் பரிசீலிக்க இயலாது” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டே ஓய்வு பெறவிருந்த எஸ்.கே.யாதவ் இந்த வழக்கை விசாரணை செய்து முடிப்பதற்காக பணி நீட்டிப்பு செய்யப்பட்டார். 2015 முதல் இந்த வழக்கை அவர் விசாரித்து வந்ததால், அதனை அவர் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com