ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
ஜல்லிக்கட்டு தொடர்பாக பீட்டா தொடர்ந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு நடத்திய அமைதிப் போராட்டத்தின் விளைவாக, அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.
தமிழக அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மேலும், மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2 நீதிபதிகளுக்கு பதிலாக இனி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டதால், ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் இதுவரை சிக்கல் இல்லை.
ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கலச்சாரமா, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக மாநில அரசு சட்டதிருத்தம் கொண்டு வர முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து இந்த அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவுள்ளது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் நீதிபதிகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவிக்கும்.