மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவின் முதல்வர் பட்னாவிஸ்க்கு பெரும்பான்மை இருக்கிறதா என உச்சநீதிமன்ற நீதிபதி கண்ணா கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிராவில் பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவின் முதல்வர் பட்னாவிஸ்க்கு பெரும்பான்மை இருக்கிறதா? என உச்சநீதிமன்ற நீதிபதி கண்ணா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பட்னாவிஸ் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, முழு பெரும்பான்மையுடன்தான் ஆட்சி அமைத்துள்ளோம் எனத் தெரிவித்தார். அதற்கு பெரும்பான்மை இருக்கிறது என்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 22 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தது நான்தான். அதில் மாற்றமில்லை என அஜித்பவார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதாடிய, சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், அவசர அவசரமாக ஆட்சியமைத்த பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்பதில் உள்நோக்கம் உள்ளது என வாதாடினார்.
மேலும் காலை 5.47க்கு அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஆடசியை நீக்கும் அளவுக்கு இது அவரச நிலை பிரகடனமா? எனவும் கேள்வி எழுப்பினார். சிவசேனா ஆட்சியமைப்பதை தடுக்கவே ஆளுநர் இவ்வாறு செயல்பட்டுள்ளார் எனவும் 54 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறும் அஜித் பவார் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து வாதாடிய தேசியவாத காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் சிங்வி, ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பாஜகவை ஆதரிப்பதாக கூறினால் அது கட்சியின் கருத்தா? என கேள்வி எழுப்பினார். மேலும், “54 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்களா? மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை” என வாதாடினார்.