உச்சநீதிமன்றம் கேட்ட அரசியல்வாதிகளின் குற்றவழக்கு பட்டியல்
குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படுவதை, குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்றாலே தேர்தலில் நிற்க முடியாது என மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசியல்வாதிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த புள்ளிவிவரத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவது எளிதானதல்ல எனக் கருதுவதாக மனுதாரரிடம் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் நடைமுறையை தூய்மைப்படுத்தும் எண்ணம் நியாயமானது என்றும் கருத்து தெரிவித்தனர். புள்ளிவிவர அடிப்படையில் 34 சதவிகிதம் எம்பி, எம்எல்ஏக்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பதாகவும் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.