”அலட்சியத்தால் நிகழ்ந்த உயிரிழப்புக்கு காப்பீடு தொகை வழங்கத் தேவையில்லை” - உச்ச நீதிமன்றம்
கர்நாடகாவின் மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரவிஷா. 2014இல் இவர் ஓட்டிச் சென்ற கார் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ரவிஷா உயிரிழந்தார். காரில் பயணித்த அவரது மனைவி, பெற்றோர், சகோதரி ஆகியோர் காயங்களுடன் உயிர்தப்பினர். ரவிஷாவின் மரணத்துக்கு காப்பீடு நிறுவனம் 80 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை எழுப்பினர். அதிவேகமாகவும் அலட்சியமாகவும் கார் ஓட்டியதுதான் ரவிஷாவின் உயிரிழப்புக்குக் காரணம் என்பதால் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று மோட்டார் வாகன் இழப்பீடு தீர்ப்பாயமும் கர்நாடக உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்தன.
ரவிஷா குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் PS .நரசிம்மா, R .மகாதேவன் இருவரும் ரவிஷா அதிவேமாக கார் ஓட்டியதால்தான் விபத்து நேர்ந்துள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர். தனது அலட்சியத்தால் உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடு தரத் தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.