டெல்லியில் பசுமைப் பட்டாசுகள்.. தயாரிக்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்!
பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது எனவும், அவ்வாறு தடை விதிப்பது அத்தொழிலை மாஃபியாக்கள் கைப்பற்ற வழிவகுத்துவிடும் எனவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
பட்டாசுகளால் கடுமையான காற்று மாசு ஏற்படுவதால், அதைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிப்பதுடன், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய மற்றும் வெடிக்க கடந்த ஆண்டு முழுமையான தடை விதித்திருந்தது. இதனால், பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
இந்தப் பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான பட்டாசு தொழிலாளர்களுக்கான உரிமையும், தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமையும் ஒருங்கே இருக்கும் வகையில், ஒரு சமநிலையான அணுகுமுறை இந்த விவகாரத்தில் கடைபிடிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தனர். அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்தி, இந்த விவகாரத்தில் தீர்வை காணுமாறு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகத்தை அறிவுறுத்தினர். மேலும், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமை பட்டாசுகளை தயாரிக்க அனுமதித்த நீதிபதிகள், அவற்றை அங்கு விற்க தடை விதித்தனர்.