ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது.
இதனையடுத்து தீர்ப்பை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும் எனவே, தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் தான் ஹிந்து பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய், பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை கணக்கில் கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்தார். மேலும், ஹிந்து பத்திரிகையில் வெளியிடப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஒருபோதும் பொதுவெளிக்கு வரக் கூடாதவை, இது அரசின் ரகசியக் காப்பு சட்டத்தை மீறிம் செயல் என்பதால் ஹிந்து நாளேட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், பாகிஸ்தானின் F 16 விமானங்களை எதிர்கொள்ள ரஃபேல் விமானங்கள் அவசியம் தேவைப்படுவதாகவும் அவர் விளக்கினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி ஊழல் புகாரை அரசு மறைக்க பார்க்கிறதா என கேள்வி எழுப்பினார். பின் அரசுத் தரப்பு வாதங்கள் முடிவற்ற நிலையில் வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.