ரஃபேல் வழக்கு மீண்டும் விசாரணை - உச்சநீதிமன்றம் ஒப்புதல்
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த விவரங்கள் திரிக்கப்பட்டு கூறப்பட்டிருந்ததாகவும், எனவே வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரஷாந்த பூஷண் தெரிவித்திருந்தார். ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்படக் காரணமாக இருந்த சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில், தீர்ப்பை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.