சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரிய மனுவை நீதிபதிகள் நிராகரித்ததை அடுத்து அவர் சரணடைந்தார் .
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கியிருந்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹராவில் உள்ள பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன் சசிகலா, இளவரசி ஆகியோர் சரண் அடைந்தனர். அதே சமயம் நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று நீதிமன்றத்தில் நேரில் சரண் அடைய முடியவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து பெங்களூருவில் சுதாகரன் சரண் அடைந்தார்.