'க்ளாஸ் லீடர்' தேர்தலில் தோல்வி: தற்கொலை செய்துகொண்ட 13 வயது சிறுவன்
வகுப்புத் தேர்தலில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த 13 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்புக்கு தலைவரை தேர்ந்தெடுக்க மாணவர்கள் மத்தியில் தேர்தல் வைத்துள்ளனர். அந்த தேர்தலில் போட்டியிட்ட 13 வயது மாணவன் ஒருவன் சக மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த மாணவனின் வகுப்பு நண்பர்கள் பெண்ணிடம் தோல்வி அடைந்துவிட்டாதாக கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய ரயில்வே போலீசார், சிட்யால் மற்றும் ரமன்னபேட் ரயில் நிலையங்களுக்கு நடுவே பள்ளி மாணவனின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் மாணவர் தனியார் பள்ளியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதற்கிடையே மாணவரை காணவில்லை என பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாணவரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடல் அடையாளம் காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்தலில் மனமுடைந்த காரணத்தினால் தான் மாணவன் உயிரிழந்ததாக பெற்றோர்கள் நம்புகின்றனர். மாணவரின் மரணம் குறித்து போலீசார் பல கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.