சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள், விளம்பரத்திற்கு பின்னால் செல்லாமல் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வானவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.
72வது பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வானவர்களிடம் காணொலி காட்சி மூலமாக உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அகில இந்திய சேவை அதிகாரிகள், குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள், விளம்பரத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். விளம்பரம் தேடும் வேட்கை வேலைக்குத் தடையாக இருக்கிறது. தற்போதைய காலங்களில் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றாலும், காவல்துறை அதிகாரிகள் அதிலிருந்து விலகி தங்கள் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும்”என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒன்று நடவடிக்கையே எடுப்பதே இல்லை அல்லது தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் காவல்துறை மீது உள்ளன. அதனால் காவல்துறையினர் இவற்றைத் தவிர்த்து, நியாயமான நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டும். காவல்துறையின் பிம்பத்தை மேம்படுத்த “தகவல் தொடர்பு மற்றும் உணர்திறன்” அவசியம். இதனை அனைத்து காவல்துறையினரும் உணர்ந்து, மக்களுடன் தொடர்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.