கட்டுக்கடங்காமல் செல்லும் மக்கள் போராட்டம் - இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

கட்டுக்கடங்காமல் செல்லும் மக்கள் போராட்டம் - இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்
கட்டுக்கடங்காமல் செல்லும் மக்கள் போராட்டம் - இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருகட்டமாக, அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது. இதையடுத்து, உயிருக்கு பயந்து கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோடினார். அதன் பிறகு தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், இடைக்கால அதிபராக ரணில் விக்ரசிங்கவை நியமித்தார். அதன்படி, ரணில் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். இதற்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அடக்க ராணுவம், போலீஸாருக்கு முழு அதிகாரத்தை இலங்கை அரசு வழங்கியது. இதற்கு வசதியாக கடந்த வாரம் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், வாழ்வாதாரத்தை இழந்த ஆத்திரத்தில் போராட்டத்தில் குதித்திருக்கும் மக்களை, ராணுவத்தினரால் அடக்க முடியவில்லை. இதனால் அங்கு மக்கள் கிளர்ச்சி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வரும் புதன்கிழமை (ஜூலை 20) இலங்கையின் நிரந்தர அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரசிங்க, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா, எம்.பி. துல்லாஸ் அழகப்பெருமாள், மார்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமர திசநாயக ஆகியோர் போட்டியிடுக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், அதிபர் தேர்தல் இடையூறு இல்லாமல் நடைபெற ஏதுவாக இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அதிபர் மாளிகை இன்று காலை அறிவித்தது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர நிலை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com