மோட்டார்சைக்கிளில் இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப்பயணி ஒருவருக்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
fernanda.4ever என்ற இன்ஸ்டாகிரம் கணக்கில், தான் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளானது குறித்து பேசியிருக்கிறார் அப்பெண்மணி. முகம் முழுக்க காயங்களுடன் அந்தப் பெண்மணியை பார்க்கும்போதே நமக்குள் அச்சம் தொற்றிக்கொள்கிறது. " எங்களுக்கு நடந்தது யாருக்கும் நடந்துவிடக்கூடாது. ஏழு நபர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். என்னையும், என் கணவரையும் அடித்துவிட்டு,எங்கள் பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டனர். பொருட்களை இழந்தது பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால், என்னை அவர்கள் பாலியல் வன்முறை செய்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர். என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்கள். இப்போது நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம். காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறோம். "
எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதையும் அந்தப் பெண்மணி இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த துன்பவியல் சம்பவம் குறித்து , காவல் அதிகாரி பீத்தம்பர் சிங் கூறுகையில், " வெள்ளிக்கிழமை இரவு நாங்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த இருவரையும் பார்த்தோம். முகத்தில் காயங்களுடன் அவர்கள் சாலையில் நின்றுகொண்டிருந்ததால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தோம். அவர்கள் ஸ்பானிஷ் மொழியில் பேசியதால், எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவர்களை அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான மருத்துவ உதவிகளைச் செய்துகொடுத்தோம். அப்போது அந்த பெண்மணி தான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அங்கிருந்த மருத்துவரிடம் தெரிவித்தார். இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்களை பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் வாங்கிக்கொண்டு உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினோம். சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றம் சாட்டபட்டவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இதுகுறித்து ஜார்கண்ட் பாஜக தலைவர் கூறுகையில், " ஜார்க்கண்டில் சட்டம் ஒழுங்கு மொத்தமாய் சீர்குலைந்து போயிருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாதிரியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், யாராவது ஜார்கண்டிற்கு வருவார்களா? " என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து மாநில அமைச்சரான மிதிலேஷ் தாக்கூர் " இப்படியானதொரு சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட யாரையும் விடமாட்டோம். அவர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். " என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எளிதாக வெளிச்சத்துக்கு வரும் காலமிது. இப்படியான குற்றங்களைச் செய்துவிட்டு தப்ப முடியாது என்பது தெரிந்தும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது வெட்கக்கேடானது. அதிலும் இந்தியாவில் சுற்றுலாப்பயணம் செய்யலாம் என இந்திய மண்ணை நம்பி வந்த பெண்மணிக்கு இப்படி நடந்திருப்பது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு.