முடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ
காஷ்மீரில் முடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவை ஊட்டிய சி.ஆர்.பி.எப். வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் குழுவாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அணிவகுத்து சென்ற வாகனங்களின் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றியவர் இக்பால் சிங். இவர் ஸ்ரீநகரில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், பணியில் இருந்த இக்பால்சிங், சாலையோரம் அமர்ந்திருந்த முடக்குவாதம் பாதித்த சிறுவனை கண்டார். அவனுக்கு தனது மதிய உணவை இக்பால் சிங் ஊட்டி விட்டார். அதனுடன் அவனுக்கு தண்ணீர் அருந்த கொடுத்து வாயை துடைத்து விட்டுள்ளார்.
இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இக்பால் சிங்கிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த செயலுக்காக சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி இயக்குனர் ஜெனரல் கவுரவித்துள்ளார்.