ரயிலில், முன்பதிவு பெட்டிகளில் படுக்கை வசதி பெற்ற பயணிகள் உறங்குவதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்தவர்கள், தற்போது இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை, அதாவது 9 மணி நேரம் உறங்க அனுமதி. அந்த நேரம் இரவு பத்து மணியிலிருந்து காலை 6 மணியாக மாற்றி அமைக்கப்பட்டு தூங்கும் நேரம் 8 மணி
நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கீழ் படுக்கை வசதி மற்றும் நடுவரிசை படுக்கை வசதி பெற்ற பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். இவ்விரண்டு படுக்கைகளில் பயணம் செய்பவர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னரும் உறங்கிக் கொண்டிருந்தால், அது
தூக்கத்திலிருந்து விழித்த மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறாக இருக்கும் என்பதால், ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
நேரம் கடந்தும் தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்திருக்கிறது. இருப்பினும், உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள்
மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னரும் தூங்க விரும்பினால், அவர்களுக்கு சகபயணிகள் ஒத்துழைக்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து ரயில்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் ரயில்வே தெரிவித்திருக்கிறது.