உத்தரப்பிரதேசத்தில் வெவ்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக ஒரே நாளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் பருவமழை முடிந்து பனிக்காலம் தொடங்கியுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலை தெளிவாக தெரியாத அளவுக்கு புகை மண்டலம் போல பனி சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ஔரையா, கான்பூர் தேஹாத், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) காலையில் பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
பேருந்து, லாரி, கார் ஆகிய வாகனங்களே விபத்தில் அதிகமாக சிக்கியுள்ளன. சில அடி தொலைவில் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத அளவுக்கு சாலையில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதாக விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் கூறினர். காலை வேளையில் சாலையை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.