மத்தியப் பிரதேசம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், உஷா சோனி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இந்த நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி அவரது குடும்பத்தினருக்கு வருமானவரித் துறையிடம் இருந்து ரூ.7.55 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதுவும் உஷா சோனி பெயரில், கடந்த 2017-18ஆம் ஆண்டுக்குரிய நிலுவைத் தொகை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினரே அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுதொடர்பாக உஷா சோனி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து உஷா சோனியின் மகன் பவன் சோனி, “எனது தாய் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு 2013 நவம்பர் 16 அன்று இறந்தார். என் தாயரின் பான் எண்ணைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதால் இந்த தவறு நடந்துள்ளது. அவரது பெயரில் பணப்பரிவர்த்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் காவல்துறை மற்றும் வரித் துறையினர் எங்களுக்கு உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பெத்துல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் சவுத்ரி, ”பான் எண்ணைத் தவறாகப் பயன்படுத்தியதாக இரண்டு புகார்கள் வந்துள்ளன. விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வருமானவரித் துறையிடம் இருந்து மேலும் கூடுதல் தகவல் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம். தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்ததும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெதுல் மாவட்டத்தில் 44 பேர் ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வரி நோட்டீஸ்களைப் பெற்றுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், இரும்பு வியாபாரம் செய்து மாதம் ரூ.7 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நிதின் ஜெயின் என்பவருக்கும் ரூ.1.26 கோடி அளவு வருமானவரி கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.