மஹாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடிக்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி அம்மாநில விவசாயிகள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். எனவே, எதிர்க்கட்சியான சிவசேனா கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளனர். சிவசேனாவைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், 63 எம்.எல்.ஏ.க்கள், கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி, கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் என பல மட்டத்தில் உள்ளவர்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பார்கள். அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ரூ.10 லட்சம் கொடுப்பார் என்று மூத்த தலைவர் திவாகர் ராவோட் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே, தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம் பணம் வசூல் செய்து ரூ.4.5 கோடியை விவசாயிகளுக்காக கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெறும் மாநிலம் மஹாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது.