’சார் ப்ளீஸ்..’ பாஜகவிலிருந்து விலக 2ஆவது தடவை கடிதம் எழுதிய ஷெசாத் பூனாவால!
பாஜகவின் தேசிய அளவிலான முதன்மைச் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டு, தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்று வந்தவர் ஷெசாத் பூனாவாலா. இந்த நிலையில், தனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு அவர் இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 30ஆம் தேதி, முதன்முதலில் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார். ஆனால் அக்கட்சி அதனை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவைத்து, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்துத்தான், ஆகஸ்ட் 17 அன்று இரண்டாவது கடிதத்தை எழுதியுள்ள அவர், தனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு பொறுப்புகளில் இருந்து முழுமையாக விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அவசர நிதி தேவைகள் மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாகவே தான் அரசியல் களத்தில் இருந்து விலகி தனியார் துறையில் பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”தாம் அமைப்பை (வியவஸ்தா) தான் விட்டுவிலகுகிறேனே தவிர, நபரையோ (பிரதமர் மோடி) அல்லது பாஜகவின் கொள்கையையோ அல்ல" எனக் கூறி, கட்சிக்கு வெளியிலிருந்தும் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோருக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
வம்சாவளி அரசியல் பின்புலம் இல்லாத ஒரு பசுமந்தா முஸ்லிம் இளைஞருக்கு பாஜகவில் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்து தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாஜகவில் இணைந்த பூனாவாலா, கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகவும், அமைப்புக்குள் இருக்கும் அதன் முன்னணி முஸ்லிம் குரல்களில் ஒருவராகவும் உருவெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

