11 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: சகோதரன், தாய்க்கு சிறை
11 வயது சிறுமியான தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்தச் சிறுமியின் சகோதரனுக்கும், தாய்க்கும் மும்பை சிறுவர்கள் சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், தனது சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி மும்பை சிறுவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சகோதரனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சகோதரனால் தனக்கு நடந்த கொடுமையை தாயிடம் கூறியும் தனது மகன் செய்த குற்றத்தை மறைக்க மகளை உடல் ரீதியாக துன்புறுத்தியதால் அவரது தாய்க்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கவும் சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2014ம் ஆண்டு , இந்தச் சிறுமியின் தாய்க்கும், தந்தைக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனால் தனது 19 வயது சகோதரனுடன் ஒரு அறையில் அந்தச் சிறுமி உறங்கியுள்ளார். அப்போது அவனால் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். இதனை தனது தாயிடம் கூறியபோது, இந்தச்சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என சிறுமியின் தாயார் அடித்து துன்புறுத்தி உள்ளார். சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த வழக்கில் தற்போது தாய்க்கும், மகனுக்கும் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.