தனது சாவுக்கு பாஜக எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரி தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் துறவி ஒருவர்.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான ரவிநாத் என்பவர் துறவியாக வாழ்ந்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன் ஒரு கோவில் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துறவி ரவிநாத் இறப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தன்னுடைய சாவுக்கு பாஜக எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரி தான் காரணம் எனவும் தனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனவும் ரவிநாத் குறிப்பிட்டிருந்தார்.
துறவி ரவிநாத்துக்கு சொந்தமான நிலம், பீன்மால் தொகுதி எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரியின் இடத்திற்கு அருகே அமைந்துள்ளது. தனது இடத்தில் ரிசார்ட் கட்ட முயன்று வரும் எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரி, அதனை விரிவுபடுத்துவதற்காக ரவிநாத்தின் நிலத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரவிநாத்தின் நிலத்தை அபகரிக்க எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரி தொடர்ச்சியாக முயன்று வந்துள்ளார். இதில் அவருக்கு நெருக்கடியும் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த துறவி ரவிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலத்தை வாங்குவது தொடர்பாக எங்களிடையே எந்த தகராறும் இல்லை என்றும் நிலத்தை வாங்க அணுகியபோது ரவிநாத் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரி விளக்கமளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: கச்சநத்தம் படுகொலை: 27 குற்றவாளிகளுக்கும் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு