டெல்லி செங்கோட்டையை சுற்றி ஸ்னைப்பர் து‌ப்பாக்கிகளுடன் பலத்த பாதுகாப்பு  

டெல்லி செங்கோட்டையை சுற்றி ஸ்னைப்பர் து‌ப்பாக்கிகளுடன் பலத்த பாதுகாப்பு  
டெல்லி செங்கோட்டையை சுற்றி ஸ்னைப்பர் து‌ப்பாக்கிகளுடன் பலத்த பாதுகாப்பு  

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளதால், நாடு முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி செங்கோட்டையில் வழக்கம் போல பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து விட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். தே‌சியபாதுகாப்பு படையினர், ‌ஸ்வாட் கமாண்டே படையினர், ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர்‌, டெல்லி போலீசார் என செங்கோட்டை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது‌. குற்றப் பின்னணி கொண்டவர்களை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில், அவர்களது முகங்களை அங்கீகரிக்கும் சாப்ட்வேர் கொண்ட கேமராக்கள் டெல்லி போலீசாருக்கு முதல் முறையாக வழங்கப்‌பட்டுள்ளது.

சுதந்திர தின விழா நடக்கும் செங்கோட்டை பகுதிக்கு பொதுமக்கள் எளிதாக வ‌ந்து செல்லவும், போக்குவர‌த்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் டெல்லியில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் செங்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை செல்லும் சாலைகளும் பாதுகாப்புப் படையினரின் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. செங்கோட்டை சுற்றியுள்ள உயர்ந்த கட்டடங்களில் குறிபார்த்து இலக்குகளை சுட்டுத் தள்ளும் திறன் படைத்த வீரர்கள் ஸ்னைப்பர் வகை து‌ப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வான் எல்லையை பாதுகாக்கும் வகையிலான ட்ரோன் எதிர்ப்பு ஆயுதம் தாங்கிய படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, டெல்லி முழுவதும் சுமார் 20 ஆயிரம்‌ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‌சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டு, கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் படைகளுக்கு தெரிவிக்க‌வும் ஏற்பாடு செய்யப்‌பட்டுள்ளன.

செங்கோட்டை தவிர, குடியரசுத் தலைவர் மாளிகை‌யிலும் போதிய அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பு இருசக்கர வாகன பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானங்களை ஏவுவது, ராட்சத பலூன்களை பறக்க விடுவது, பாராகிளைடிங் சாகசம் செய்வது உள்ளிட்ட வான்வழி நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே டெல்லி போலீசார் தடை‌விதித்துள்ளனர்.

இதே போல் நாட்டின் பிற பகுதிகளிலும் குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு‌ பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அ‌ந்தஸ்து நீக்கப்பட்ட‌தால், அதிருப்தியில் உள்ள பாகிஸ்தான் ப‌யங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்பதால், ‌உஷார் நடவடி‌க்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன் எப்போதும் இல்‌லாத வகையில் இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நாடு முழுவதும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com