“கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது” உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உரிய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கோ அல்லது கழிவுகளை அகற்றும் வசதியோ இல்லாமல் அணு உலை இயங்கி வருவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் அழிந்து வருவதாக வாதிட்டார். அப்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க 4 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்றார். இதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எதிர்ப்பு தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் கதிர்வீச்சு சாத்தியமுள்ள அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை உடனே கட்டுவது என்பது ஆபத்தில் முடியும் என்பதால், மத்திய அரசுக்கு 4 ஆண்டுகள் அவகாசம் தருவதாக தெரிவித்தனர். இடைப்பட்ட காலத்தில் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு மனுதாரர் உச்சநீதிமன்றத்தை தேவைப்பட்டால் அணுகலாம் எனவும் தெரிவித்தனர்