பெகாசஸ் மென்பொருள் கொண்டு முக்கிய பிரமுகர்களை மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்த சர்ச்சையில், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
இஸ்ரேல் நாட்டில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக நாட்டில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இம்மனு மீது விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் பற்றி விசாரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு அமைக்கப்படும் என்றும் இது தேச பாதுகாப்பு தொடர்புள்ள விஷயம் என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த கூடாது எனவும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது, மென்பொருளை கொண்டு உளவு பார்க்கப்பட்டிருந்தால் அதற்கு சட்டபூர்வமான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்