ஆதாரை இணைக்க, மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மக்களைக் கடாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பன வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜென்ரல் கே.கே.வேணுகோபால், கட்டாய ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள் கூறும்போது, ‘மார்ச் 31 வரை ஆதாரை இணைக்க அவகாசம் என்ற மத்திய அரசின் முடிவு ஏற்கப்படுகிறது. அதே நேரம் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதாரை இணைக்க வேண்டும் என்று மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. மக்களின் விருப்பதின் பேரிலேயே ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜனவரி 17ஆம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடத்தப்படுகிறது.

