நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா? லாலு பிரசாத் மகனுக்கு அபராதம்!
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்விக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்தது.
பீகாரில், ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைந்து லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆட்சியமைத்தது. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராக இருந்தார். அவருக்கு துணை முதலமைச்சருக்கான அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுடன் கூட்டணியை மாற்றியதால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் அரசில் இருந்து விலகியது. தற்போது தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சித்தலைவராக இருக்கிறார். இதனால் அவருக்கு வேறு பங்களா ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்த பங்களாவுக்கு மாறாமல், துணை முதலமைச்சருக்கான அரசு வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த அமர்வுகள், துணை முதலமைச்சருக்கான அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்விக்கு உத்தரவிட்டன. இந்த உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் தேஜஸ்வி.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அந்த பங்களாவை தேஜஸ்வி காலி செய்ய உத்தர விட்டது. மேலும் உயர்நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்டும் கேட்காமல் தொடர்ந்து நீதித்துறை நேரத்தை வீணடித்ததற்காக, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.