இந்தியா
லக்கிம்பூர் வன்முறை: உ.பி. காவல்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
லக்கிம்பூர் வன்முறை: உ.பி. காவல்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உபி காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக்கு ஏன் உத்தரவிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர் அதன் பிறகு ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து திவு செய்த உச்ச நீதிமன்றம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உத்தரப் பிரதேச அரசு லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக வழங்கியுள்ள விசாரணை அறிக்கையில் எந்த ஒரு விஷயமும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் அலைபேசிகள் கூட இன்னும் பறிமுதல் செய்யப்படாமல் இருப்பது ஏன் எனவும், பிரதான குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ராவைத் தவிர, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் அலைபேசியே பயன்படுத்தவில்லை என சொல்ல வருகிறீர்களா என கேள்வி எழுப்பியதோடு, விசாரணையின் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்றது, அதன்பிறகு 4 பேர் அடித்துக்கொல்லப்பட்டது என இரண்டு விவகாரங்களும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக சாட்சியங்களிடம் இருந்து முறையான வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் உங்கள் விசாரணை அறிக்கையை பார்த்தால் அந்த நம்பிக்கை எங்களுக்கு ஏற்படவில்லை, எனவே நாங்கள் ஏன் இந்த விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக்கு உத்தரவிட கூடாது என கேள்வி எழுபினர். அதற்கு வரும் வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாக உத்தரபிரதேச அரசு கூறியதையடுத்து வழக்கு வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.