பீகார் | பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்.. புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி தேர்வு!
துணை முதலமைச்சராக இருந்த பாஜகவைச் சேர்ந்த சாம்ராத் சவுத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. இதையடுத்து 10ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். இந்த நிலையில், பீகார் சட்டசபை, மேலவை, நாடாளுமன்றத்தின் இரு அவைகள் என அனைத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் ராஜ்யசபா மட்டும் மிச்சம் இருந்ததாலேயே அதில் உறுப்பினராகத் தேர்வானேன் என நிதிஷ்குமார் கூறியிருந்தார். தொடர்ந்து அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் சமீபத்தில் பதவியேற்றார். இதையடுத்து, அவர் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, அவரது பீகார் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் நிதிஷின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்து, பாஜகவின் ஆதிக்கம் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சராக இருந்த பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இரண்டு துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒரு துணை முதல்வர் பதவி நிதிஷ் கட்சிக்குச் செல்லும் எனத் தெரிகிறது. பீகார் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

