உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கொடுப்போம் என உறுதி கொடுத்துள்ளார்.
“விவசாயிகளின் இன்னுயிர் விலை மதிப்பற்றது. ஏனென்றால் அவர்கள் அடுத்தவர்களுக்காக விவசாயம் செய்கின்றவர்கள். இந்த நேரத்தில் நான் ஒரு உறுதி அளிக்கிறேன். வரும் 2022-இல் சமாஜ்வாடி கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைந்ததும், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் கொடுப்போம்” என ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் அகிலேஷ்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி நின்றது குறிப்பிடத்தக்கது.