அடுத்தடுத்து உயிரிழப்புகள்... விவசாயிகளின் டெல்லி போராட்டக்களத்தின் கவலைக்குரிய பக்கம்!

அடுத்தடுத்து உயிரிழப்புகள்... விவசாயிகளின் டெல்லி போராட்டக்களத்தின் கவலைக்குரிய பக்கம்!
அடுத்தடுத்து உயிரிழப்புகள்... விவசாயிகளின் டெல்லி போராட்டக்களத்தின் கவலைக்குரிய பக்கம்!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டக் களத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்வது கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. பள்ளிச் சிறுவர்கள் களத்திலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வது உள்ளிட்ட காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகின்றன. சர்வதேச அளவில் போராட்டம் கவனம்பெறத் தொடங்கியுள்ளது. கனடா பிரதமரின் ஆதரவு குரலைத் தொடர்ந்து இங்கிலாந்து எம்.பி.க்கள் 36 பேர் போராட்டத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகிவரும் அதேவேளையில், சில கவலைக்குரிய விஷயங்களும் போராட்டத்தில் அரங்கேறி வருகின்றன. போராட்டத்தில் கலந்துகொண்டு பாதிக்கப்படுபவர்களில் அதிகப் பேர் வயது முதிர்ந்தவர்கள். விவசாயிகளாக இவர்கள் போராட்டக் களத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, இரவு பகலாக குரல் கொடுத்து வருகின்றனர்.

டெல்லியில் நிலவி வரும் குளிர் காலநிலை இவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள வயது முதிர்ந்தவர்கள் போராட்டக்களத்திலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை இரு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், "போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் உயிர் நீத்தது வேதனை தருகிறது. அந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் அரசு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கும்" என்று தெரிவித்ததோடு, இரண்டு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த இரு விவசாயிகளோடு உயிரிழப்பு நிற்கவில்லை. போராட்டத்தின் எட்டாம் நாளான வியாழக்கிழமை 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டது. இறந்தவர்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள். இது போராட்டக் களத்தில் சற்று சோகத்தை ஏற்படுத்தினாலும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்வரை போராடப் போவதாக இறந்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொள்ள பல்வேறு மருத்துவ முகாம்கள் போராட்ட களத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. நவம்பர் 25, 26 தேதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தாக்குதலில் பல விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டது. அப்படி காயம் பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த முகாம்களை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

சோகச் சம்பவங்களுக்கு மத்தியில் போராட்டக் களத்தில் நெகிழவைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளில் ஒருவர் சுபாஷ் சீமா. வியாழக்கிழமை இவரின் மகள் திருமணம் நடந்துள்ளது. தந்தை என்ற நிலையில் மகளின் திருமணத்தில் பங்கேற்காமல் சீமா கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

"நான் ஒரு விவசாயி. என் வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்தது விவசாயம்தான். அதனால்தான் திருமணத்துக்குக்கூட செல்லாமல் போராட்டக் களத்திலேயே இருந்துவிட்டேன். என் மகள் அழைத்தபோதும் விவசாய சகோதரர்களை விட்டுவிட்டு வரமுடியாது என்றே சொல்லிவிட்டேன்" எனக் கூறும் சீமா பின்னர் வீடியோகால் மூலமாக போராட்டக் களத்தில் இருந்தவாறே மகளின் திருமணத்தை பார்த்துள்ளார்.

இதேபோல், இந்தப் போராட்டத்தில் பள்ளிச் செல்லும் சிறுவர்கள் பெரும் அளவில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பகலில் தங்கள் தாய் - தந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு, இரவு நேரத்தில் கல்வி கற்கின்றனர். ஆன்லைன் கிளாஸ் மூலமாக தங்களுக்கு நடத்தப்படும் பாடங்களை இந்தக் குழந்தைகள் கற்று வருகிறார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் போராட்டக் களத்தில் அரங்கேறி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com