’பாக்.மருமகள் சானியாவை நீக்க வேண்டும்’: தெலங்கானா எம்.எல்.ஏ போர்க்கொடி
’டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் மருமகள். அவரை அரசு விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று தெலங்கானா பாஜ எம்.எல்.ஏ போர்க்கொடி தூக்கியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலை யில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியும், இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இதை சிலர் சமூகவலைத் தளங்களில் சிலர் விமர்சித்தனர்.
இந்நிலையில், சானியா ட்விட்டரில் அளித்த விளக்கத்தில், “உங்கள் வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் நான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொட்டை மாடியில் வந்து நின்று கத்த வேண்டிய அவசியமும் இல்லை. நான் என் நாட்டுக்காக விளையாடுகிறேன். அதற்காக வியர்வை சிந்துகிறேன். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். தற்போது அமைதிக்காக நான் பிரார்த் தனை செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியாயின. தெலங்கானா மாநில விளம்பர தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு அந்த அரசு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அம்மாநில பாஜ எம்எல்ஏ ராஜா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘’புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண் டாம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து மாநில அரசு உடனடியாக நீக்க வேண்டும்’’ என்றார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.