சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜை முன்பதிவு... பக்தர்கள் ஏமாற்றம்
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால முன்பதிவு அனைத்தும் இரண்டே நாளில் முடிவடைந்து விட்டது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தை ஒட்டி நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு நவம்பர் 16ம் தேதி பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், பூஜைக்காலமான 60 நாட்களுக்கான முன்பதிவு இரண்டே நாளில் முடிவடைந்ததாக முன்பதிவை நிர்வகிக்கும் கேரள போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதி கிடைத்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற உள்ள மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனமதிக்கப்பட உள்ளனர். அதன்படி ஒவ்வொரு பக்தரும் 48 மணி நேரத்திற்கு முந்தைய கொரோனா “நெகட்டிவ்” சான்று, மலையேறும் உடற்தகுதிக்கான மருத்துவச் சான்று, ஆன்லைன் முன்பதிவு, 10 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி, பம்பையில் குளிக்க தடை போன்ற முக்கிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2,000 பக்தர்களும், சிறப்பு பூஜை நாட்களில் 5,000 பக்தர்களையும் அனுமதிப்பதுதான் கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டின் தற்போதைய முடிவாக உள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறையான அறிவிப்பு எதுவும் இன்றி “வெர்ச்சுவல் க்யூ சிஸ்டம்” மூலம் முன்பதிவு துவங்கியது. இரண்டே நாட்களில் சபரிமலையின் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலமான 60 நாட்களுக்கும் முன்பதிவு முடிந்துள்ளதாக முன்பதிவை பொறுப்பேற்று நிர்வகிக்கும் கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.