பம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்

பம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்
பம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்

பம்பை பகுதியில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் அடித்து நொறுக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாத வழிபாட்டுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் வரத் தொடங்கினர். 

நேற்று கோயிலுக்குச் சென்ற பெண்கள் வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இன்றும் அவர்களை தடுக்கும் வகையில் சபரிமலைக்குச் செல்லும் வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரண முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் நிலக்கல்லில் சபரிமலைக்கு வரும் பெண்களின் கால்களில் விழுந்து கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைப்பது மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் பெண்களை அழைத்துசெல்ல காவல்துறையினர் முயற்சித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க சபரிமலை செல்லும் வழிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சபரிமலையில் கோயிலின் அடிவாரப்பகுதியான நிலக்கல்லில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தொடர் தடியடியில் ஈடுபட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். தடியடியால் பலர் வனப்பகுதிக்குள் ஓடினர்.

 இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள அமைச்சர் சைலஜா, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தின் மூலம் சிலர் அரசியல் செய்வதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் போராட்டம் குறித்த வீடியோ பதிவை ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் காவல்துறையினர் வன்முறையை கலைப்பதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும் ஆள் நடமாட்டமே இல்லாத பம்பை பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானங்களை அடித்து நொறுக்கும் காட்சி பதிவாகி உள்ளது. மேலும் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை கீழே தள்ளி அவர்கள் சேதத்தை ஏற்படுத்துவதும் பதிவாகி உள்ளது. 

மேலும் வாகனங்களில் இருக்கும் தலைக்கவசங்களை தங்களின் தேவைக்காக அவர்கள் எடுத்தும் செல்கின்றனர். காவல்துறையினரின் இந்த  அத்து மீறிய செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். பாதுக்காப்பு வழங்க வேண்டியவர்களே கலவரத்தை தூண்டும்படி நடந்துக் கொள்வது எந்த வகையில் நியாயம் என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்திட்டு கண்டித்து வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com