காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி சிங், மசூத் உசேன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக செயல்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நீர் வள ஆணையத்தின் மூத்த பொறியாளர் நவின் குமார் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நவின் குமார் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவராகவும் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஐஐடியில் நீர் வளம் தொடர்பான எம்டெக் முதுகலை பட்டம் பெற்றுள்ள மசூத் உசேன், நீர் வளத் துறையில் 31 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். நீர்வளம் கணக்கிடுதல், திட்டமிடுதல், வடிவமைத்து செயல்படுத்துதல், பாதுகாப்பை உறுதிபடுத்துதல், நிதி மேலாண்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் உள்ளவர் மசூத் உசேன்.
நத்பா ஜக்ரி புனல்மின் திட்டம், இந்திரா சாகர் மற்றும் ஓம்கரேஷ்வர் புனல் மின் திட்டம் போன்றவற்றில் அவர் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். வெள்ள மேலாண்மையிலும் அனுபவம் பெற்ற மசூத், வெள்ள மேலாண்மைக்கான இந்திய-நேபாள கூட்டுக்குழுவில் இந்திய குழுவின் தலைவராக இருந்துள்ளார்.