ரூ.200 கோடி பண மோசடி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ரூ.200 கோடி பண மோசடி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தபோது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், டெல்லி திகார் சிறையில் இருந்தபடி பிரபல தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பெற்றுக்கொண்டு சிறையில் இருக்கக்கூடிய தொழிலதிபரை விடுதலை செய்ய உதவுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் ஒருபுறம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை மட்டும் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் பெற்ற பரிசுப் பொருட்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் நடிகை நோரா பதேஹி மற்றும் பிங்கி இரானியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று மீண்டும் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ச்சியாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com