டெல்லியில் ரோபோ மூலம் தீயணைக்கும் முயற்சி வெற்றி - முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் ரோபோ மூலம் தீயணைக்கும் முயற்சி வெற்றி - முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்
டெல்லியில் ரோபோ மூலம் தீயணைக்கும் முயற்சி வெற்றி - முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் முதன் முறையாக ரோபோ உதவியுடன் குடோனில் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சமய்புர் பத்லி என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் அதிகாலை 2.18 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், முதன் முறையாக ரோபோ உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரோபோ உதவியுடன் மிக குறைந்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் “எங்கள் அரசாங்கம் ரிமோட்-கண்ட்ரோல்ட் தீயணைப்பு ரோபோக்களை வாங்கியுள்ளது. இந்த ரோபோக்கள் மூலம் இப்போது அதிகபட்சமாக 100 மீட்டர் தூரம் வரை தீயை அணைக்க முடியும். இது பொருட்சேதத்தை குறைக்கவும் மற்றும் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றவும் உதவும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரிமோட் கண்ட்ரோல் தீயணைப்பு ரோபோக்கள் குறுகிய பாதைகளில் செல்லக்கூடியது. மிகவும் ஆபத்தான பணிகளையும் செய்ய கூடியது. 140 குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்தைக் கொண்டுள்ள இந்த ரோபோக்கள் நிமிடத்திற்கு 2,400 லிட்டர் தண்ணீரை வெளியிட கூடியது. இந்த ரோபோக்களில் சென்சார் மற்றும் கேமராவும் பொருத்தப்பட்டு, மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியில் உள்ள இந்த ரோபோ விரைவில் முழு நேர பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com