"ஆதாரங்களை உருவாக்கவே சோதனை" ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு
ராபர்ட் வதேராவுக்கு எதிரான ஆதாரங்களை உருவாக்குவதற்காகவே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்
சோனியா காந்தியின் மருமகனும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் 375 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் மூலம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கூறி 3 முறை ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகத்திலும், பெங்களூருவில் உள்ள ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் சுமன் ஹைடன், ''இந்த சோதனை சட்டத்திற்கு புறம்பான முறையில் நடந்துள்ளது. சோதனைக்கான உரிய ஆவணங்களை கூட அதிகாரிகள் காண்பிக்கவில்லை. அலுவலகங்களில் பூட்டை திறக்கக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. பூட்டை உடைத்து சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். அதிகாரிகள் நுழைந்தவுடனேயே அலுவலகங்களை உட்புறமாக பூட்டி விட்டனர். வழக்கறிஞர்களை கூட உள்ளே அனுமதிக்கவில்லை.இது என்ன சிறைச்சாலையா? கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை எந்த ஆதாரங்களையும் அவர்கள் கைப்பற்றவில்லை. அதனால் இன்று கதவுகளை அடைத்து ஆதாரங்களை உருவாக்கியுள்ளனர். ஆதாரங்களை உருவாக்குவதற்காகவே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தேர்தலில் அவர்கள் தோற்கப்போகிறார்கள். அதனை திசை திருப்பவே இந்த சோதனை'' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் இந்த சோதனைக்கும், தேர்தலுக்கும் தொடர்பு உண்டு. இது கவனத்தை திசை திருப்பும் செயல் என்று தெரிவித்துள்ளனர்