”என்னை இதனால்தான் குறி வைக்கிறார்கள்.. விரைவில் நான் அரசியலுக்கு வருவேன்” - ராபர்ட் வதோரா
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவின் நிறுவனம், கடந்த 2007-08-ம் ஆண்டில் நில பேரத்தில் முறைகேடாக நடந்து கொண்டது என எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை இயக்குநரகம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் அளவிலான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கிய ராபர்ட் வதேரா அதனை, தன்னுடைய அரசியல் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதன்படி, அவரிடம் விசாரிக்க 2-வது முறையாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இதன்படி, அவர் நேற்று ஆஜரானார். தொடர்ந்து இன்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எப்போதும் மக்களுக்காகவே போராடும் காந்தி குடும்பத்தின் ஒரு நபராக இருக்கிறேன் என்பதற்காக, என்னை இலக்காக்கி இருக்கின்றனர். நான் விரைவில் அரசியலில் இணைவேன். இந்த வழக்கில் இருந்து ஹரியானா அரசு முழு அளவில் என்னை விடுவித்த பின்னரும், இவை எல்லாம் நடந்து வருகின்றன. பாஜகவில் நான் இருந்திருந்தால் நிலைமை வேறு வகையாக இருந்திருக்கும். பாஜக தலைவருக்கோ அல்லது அமைச்சருக்கோ சம்மன் அனுப்பப்படுவதில்லை.
அவர்கள் என்னுடைய குடும்பம் மீதும், மாமியார் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீங்கள் எந்தளவு தொந்தரவு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாங்கள் வலுப்படுவோம். எங்களுடைய வழிகளில் வரும் எதற்கு எதிராகவும் நாங்கள் எதிர்த்து போராடுவோம். அரசால் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. நான் மக்களின் குரலாக மாறியிருக்கிறேன் என அவர்கள் பார்க்கிறார்கள். நான் ஏறக்குறைய தன்னார்வலராகி விட்டேன். ஏனெனில் அரசுக்கு நான் பதிலளித்து வருகிறேன்.
எனக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து நான் போராடி வருகிறேன். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சேவை செய்து வருகிறேன். நான் அரசியலுக்கு வருவதற்காக மக்கள் விரும்புகிறார்கள். அரசியலுக்கு வந்தால், மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் நிச்சயம் அரசியலுக்கு வரக்கூடிய காலம் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.